மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு சேருவதற்கு மாணவர்கள் தயக்கம்: விடுதி வசதி இல்லையென புகார்
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு சேருவதற்கு மாணவர்கள் தயக்கம்: விடுதி வசதி இல்லையென புகார்
UPDATED : செப் 15, 2025 12:00 AM
ADDED : செப் 15, 2025 11:31 AM

சென்னை:
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பில் சேர்க்கை நடத்த, மாவட்ட நிர்வாகங்கள் முயற்சித்து வரும் நிலையில், விடுதி போன்ற அடிப்படை வசதி இல்லாததால், மாணவர்கள் சேர தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு மருத்துவ கல்லுாரியில், ஓராண்டு இ.சி.ஜி., டயாலிசிஸ், மயக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் உள்ளிட்ட படிப்புகளில், 5,944 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு இடங்கள் உள்ளன.
அந்த இடங்களுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கையை, மருத்துவ மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் நடத்தியது. அதில், 1,316 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதிக மாணவர்கள் விண்ணப்பிக்காததால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், காலியாக உள்ள, 4,628 மருத்துவ இடங்களை நிரப்புவது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார் தலைமையில் கடந்த மாத இறுதியில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், காலி இடங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி உட்பட, அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டது. அதில், 'அக்., 10க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், மாணவர் சேர்க்கைக்கு முயற்சித்தாலும், மாணவர்களுக்கு பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை.
இது குறித்து, மருத்துவ பேராசிரியர்கள் கூறியதாவது:
ஓராண்டு தொழில்நுட்பம் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் தான் சேர்கின்றனர். அம்மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை.
கிராமப்புற மாணவ - மாணவியர் நகர்ப்புறங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து, டெக்னீஷியன் படிப்புகளை படித்தாலும், விடுதி, உணவு போன்ற அடிப்படை வசதிக்கு, மாதம் 10,000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.
ஏழை மாணவர்களால் அவ்வளவு தொகையை செலவிட முடிவதில்லை. இதனால், இப்படிப்புகளில் சேரும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.