புதிய கட்டுப்பாட்டால் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
புதிய கட்டுப்பாட்டால் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 05:32 PM

மதுரை:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 1324 விடுதிகள் செயல்படுகின்றன. ஆதி திராவிடர் சமூகத்தில் ஏழை மாணவர்கள் இலவசமாக தங்கிப் பயில்கின்றனர்.
விடுதிகளில் இந்தாண்டு 5 கி.மீ.,க்குள் வீடுகள் உள்ள மாணவர்களை சேர்ப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர். இக்கட்டுப்பாடு பெண் குழந்தைகளுக்கு கிடையாது. அதேநேரம் மாணவர்களில் ஆதரவற்றோர், ஒரு பெற்றோர் உள்ளவர்கள், பெற்றோர் வெளியூரில் தங்கி வேலை செய்வோர், ஊனமுற்றோரது மகன்களுக்கு இக்கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் இதற்கான சான்றை வழங்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை சரிவு கடந்தாண்டு வரை விடுதியில் காலியிடம் இருந்தால், பலர் கட்டுப் பாடின்றி, விடுதியில் சேர்ந்து படித்தனர். கட்டுப்பாட்டால் இந்தாண்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது.
மாநில அளவில் அனைத்து விடுதிகளிலும் 98 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆக., வரை 43 ஆயிரம் இடங்களே நிரம்பின. 55 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் காலியாக உள்ளன. பல ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து விடுதியில் சேர காத்திருக்கின்றனர். ஐந்து கி.மீ., கட்டுப்பாடால் இந்நிலை உருவாகியுள்ளது.
விடுதி வார்டன்கள் கூறியதாவது:
35 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை வந்ததில்லை. விடுதியில் மாணவர்களை அனுமதிக்க, பெறப்பட்ட அனைத்து விண்ணப்பத்தையும் பரிசீலித்து அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு ஏற்பாடு செய்து, அவர்களின் வருகையை உறுதி செய்து கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
5 கி.மீ., என்பதை செயற்கைக் கோள் பதிவின் அடிப்படையில் கணக்கிடுகின்றனர். இது மலைப்பகுதியில் பல குளறுபடியான தொலைவை காட்டுகிறது. மற்ற இடங்களிலும் தொலைவை காட்டாததால் பல மாணவர்களால் சேர முடியவில்லை.
தேர்வுக்குழு புறக்கணிப்பு மாணவர்களை தேர்வு செய்ய ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், எம்.எல்.ஏ., கிராம பிரதிநிதி அடங்கிய குழு ஒன்று உள்ளது. இக்குழு 5 கி.மீ., துார கட்டுப்பாட்டை எதிர்க்கும் என்பதால் திட்டமிட்டே அக்குழுவை புறக்கணித்து உயரதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதனால் மாணவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.