இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக சென்னையில் நீடிப்பு
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக சென்னையில் நீடிப்பு
UPDATED : டிச 31, 2025 01:13 PM
ADDED : டிச 31, 2025 01:14 PM
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாம் நாளாக நேற்று சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐந்தாம் நாளாக, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், 'கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே' என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதை கையில் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சிலர், வெயிலின் தாக்கத்தால், திடீரென மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நீதி தேவதை போல ஆசிரியர்கள் சிலர் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, தராசை கையில் பிடித்து, நுாதன போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களின் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.
'ஸ்டாலின் தாத்தா களத்துக்கு வரணும்!'
போராட்டத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின், ஒன்பது வயது மகள் சாய்ருத்ரா பேசும்போது, 'நான் பிறந்ததில் இருந்து, என் அம்மாவுடன், போராட்டம் நடத்தி வருகிறேன். ஸ்டாலின் தாத்தா களத்துக்கு வந்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்,' என்றார்

