UPDATED : மே 01, 2025 12:00 AM
ADDED : மே 01, 2025 10:27 AM

கோவை:
தமிழக அரசு கல்லூரிகளில், பாலின உணர்திறன் விழிப்புணர்வு குழு அமைக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில், மாணவர்களுக்கு பாலின உணர்திறன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உதவியுடன், பாலின உளவியல் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட இருப்பதாக, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளிலும் இதே மாதிரியான திட்டங்களை, நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை, தமிழ்நாடு உளவியல் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
மாணவர்கள் எதிர்கொள்ளும் வன்புணர்வு பிரச்னைகள் குறித்து, பெற்றோர், ஆசிரியர்களிடம் அவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை.
பள்ளிகளில் உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டால், மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை உடனுக்குடன் பகிர முடியும். இதன்மூலம் பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே ஒரு பாலமாக உளவியல் நிபுணர்கள் செயல்படுவார்கள்.
2016ம் ஆண்டு, பள்ளிகளில் உளவியல் நிபுணர்களை நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு வழங்கியிருந்தும், இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உளவியலை தனி பாடமாக கொண்டு வர, அல்லது பாடத்திட்டத்தில் இணைப்பதற்காக, பலமுறை தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் முறையிட்டும் பயனில்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்த, மனம் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறதெனினும், அந்தத் திட்டம் குறித்து மாணவர்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை.
கல்லூரி மாணவர்களுக்கு பாலின உணர்திறன் விழிப்புணர்வு வழங்குவது போல, பள்ளி மாணவர்களுக்கும் அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உளவியல் குழு அமைப்பது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கல்லூரி மாணவர்களுக்கு பாலின உணர்திறன் விழிப்புணர்வு வழங்குவது போல, பள்ளி மாணவர்களுக்கும் அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உளவியல் குழு அமைப்பது அவசியம்.

