குழந்தைகளுக்கு வித்யாரம்பம்; 'தினமலர்' சார்பில் அக்., 2ல் நடக்கிறது
குழந்தைகளுக்கு வித்யாரம்பம்; 'தினமலர்' சார்பில் அக்., 2ல் நடக்கிறது
UPDATED : செப் 10, 2025 12:00 AM
ADDED : செப் 10, 2025 09:09 AM

திருப்பூர்:
'தினமலர்' நாளிதழ் சார்பில், குழந்தைகளுக்கான, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், வரும், அக்., 2ம் தேதி நடக்க உள்ளது.
விஜயதசமிக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், கற்றலை துவக்கும் நன்னாளாக கொண்டாடுவதும் ஒரு தனிச்சிறப்பு. ஒன்பது நாட்கள் நீடித்த போர், விஜயதசமி நாளில் முடிவுக்கு வந்தது. அதில், துர்காதேவி அசுரனை வதம் செய்தாள். அதனால், வெற்றித்திருவிழாவாக விஜயதசமியை கொண்டாடுகிறோம்.
இதனால், விஜயதசமி நாளில், குழந்தைகள் கற்பித்தலை துவக்குகின்றனர். ஒரு தட்டில் அரிசியை பரப்பி, குழந்தைகள் கரம் பற்றி, 'அ' என்று எழுதி, நமது முன்னோர்கள் கற்றலை துவக்கி வைத்தனர். அதுவே, பல்லாண்டுகளாக தற்போதும் தொடர்கிறது.
வீட்டில் உள்ள இளம் தளிர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பிக்க, இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுக் கு, கற்றலை துவக்கும் வைபவத்தை, 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது.
அவ்வகையில், 'தினமலர்' மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்ப நிகழ்ச்சி, அக்., 2ம் தேதி காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுடன் வந்து, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளின் அனுக்கிரகத்துடன் வித்யாரம்பம் செய்து வைக்கலாம். அனுமதி இலவசம். பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை, 96887 53040 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.