பள்ளிகளில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு; ஆசிரியர்கள் தொய்வு
பள்ளிகளில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு; ஆசிரியர்கள் தொய்வு
UPDATED : டிச 19, 2025 07:44 AM
ADDED : டிச 19, 2025 07:45 AM

பொள்ளாச்சி:
அரசுப்பள்ளிகளில், திடீர் ஆய்வு செய்யும் வருவாய்த்துறையினர் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த விபரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதால் ஆசிரியர்கள் தொய்வு அடைகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்கள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அவ்வாறு இருந்தும், மாணவர்கள் பலர், அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு முன்னேறியும் மாணவர்கள் சிலர், எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகின்றனர். இந்நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விபரம், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கண்காணிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், வருவாய்த்துறை உயரதிகாரிகள், திடீரென பள்ளிகளில் ஆய்வு நடத்தியும் வருகின்றனர்.
அப்போது, பள்ளிக்கு வராத மாணவர்கள் விபரம், அவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்களின் நடவடிக்கை, காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீதான கவனம் குறித்து கேள்வி எழுப்புவதால், ஆசிரியர்கள் தொய்வு அடைகின்றனர்.
இது குறித்து அரசு பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தேர்வு முடிவுகளின் அடிப்படையில், அதிகப்படியான மாணவர்கள் இன்னமும் அடிப்படை கற்றலில் தேர்ச்சி அடையாமல் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் கற்றலில் மேம்படும் வகையில் ஆசிரியர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கல்வித்துறை உயரதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல்களை அளிக்கின்றனர்.
அவ்வாறு, இருக்கையில் தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவர்களை மையப்படுத்தி, பள்ளிகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்துவது ஏற்பு உடையதாக இல்லை. இது தொடர்பாக, சங்கம் வாயிலாக, அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

