3 மாதமாக சம்பளம் இல்லை பேராசிரியைகள் போராட்டம் சி.எஸ்.ஐ., நிர்வாக குளறுபடியால் சர்ச்சை
3 மாதமாக சம்பளம் இல்லை பேராசிரியைகள் போராட்டம் சி.எஸ்.ஐ., நிர்வாக குளறுபடியால் சர்ச்சை
UPDATED : செப் 10, 2025 12:00 AM
ADDED : செப் 10, 2025 08:58 AM
திருநெல்வேலி:
நெல்லையில் பழமையான பெண்கள் கல்லுாரியில், சி.எஸ்.ஐ., நிர்வாக குளறுபடியால் மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, பேராசிரியைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் சாராள் தக்கர் மகளிர் கல்லுாரி, 1895 முதல் செயல்பட்டு வருகிறது. 130 ஆண்டுகள் பழமையான இக்கல்லுாரியை கிறிஸ்தவ சி.எஸ்.ஐ., டயோசீசன் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.
அரசு உதவி பெறும் கல்லுாரியில் நிரந்தர பேராசிரியர்கள் தவிர நுாற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு மாதம்தோறும், கல்லுாரி முதல்வர் மற்றும் செயலர் இணைந்து கையெழுத்திட்டு சம்பளம் வழங்குவது வழக்கம். சி.எஸ்.ஐ., நிர்வாகத்தில் புதிய செயலர் நியமிக்கப்படாததால், மூன்று மாதங்களாக இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, பிஷப்பிடம் புகார் அளித்த பின், கடந்த மாத ஊதியம் சமீபத்தில் வங்கி கணக்கு களுக்கு வரவு வைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் ஊழியர்கள் பணம் எடுக்க முடியாதபடி, வங்கி ஊதிய கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் பேராசிரியைகள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அதனால் நேற்று கல்லுாரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகள் நடக்கவில்லை. வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்ததால், மாணவியர் ரோட்டிலும், வளாகத்திலும் சுற்றித்திரிந்தனர். வெயிலில் இருந்த ஒரு மாணவி மயக்கமடைந்தார்.