போலி கல்விச்சான்று: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு
போலி கல்விச்சான்று: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு
UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 11:03 AM
மதுரை:
தமிழ் வழியில் படித்ததற்கு வேலைவாய்ப்பில் சலுகை பெற சிலர் மதுரை காமராஜ் பல்கலையில் போலிச் சான்று பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:
தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப்1 தேர்விற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 2020 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர்.இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெற்றவர்கள். பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2021 மார்ச்சில் நீதிபதிகள் அமர்வு, தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலிச் சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சக்திராவ் குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்றது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அச்சான்றுகள் போலியானவை, தகுதியானவை, தகுதியற்றவை என முன்னுக்குப் பின் முரணாக பல்கலை தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அவை போலிச் சான்று; மோசடி நடந்துள்ளது என முடிவு செய்து மேல்நடவடிக்கைக்காக லஞ்ச ஒழிப்பு இயக்குனரகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: குற்றச்சாட்டு தீவிரமானது. போலிச் சான்று குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை, பல்கலை, டி.என்.பி.எஸ்.சி., சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சான்றுகள் மூலம் சட்டவிரோதமாக பணியில் சேர்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி., அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., சட்டப்பூர்வமான அமைப்பு.இதுபோன்ற சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்கக்கூடாது. பொது வேலைவாய்ப்பு பெறுவதில் தகுதியானவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டியது டி.என்.பி.எஸ்.சி.,யின் கடமை. விசாரணை 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
