ரயில் நிலையத்தில் திடீர் மோதல் கல்லுாரி மாணவர்கள் 9 பேர் கைது
ரயில் நிலையத்தில் திடீர் மோதல் கல்லுாரி மாணவர்கள் 9 பேர் கைது
UPDATED : டிச 15, 2025 07:55 AM
ADDED : டிச 15, 2025 07:56 AM
தண்டையார்பேட்டை:
அனுப்பம்பட்டு, குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், பச்சையப்பன், நந்தனம், மாநில கல்லுாரி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஒன்பது பேரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
பச்சையப்பன் கல்லுாரி மற்றும் நந்தனம் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, 'ரூட் தல' யார் என்பதில் பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அதனால் அவர்கள், பேருந்து, ரயில் உள்ளிட்ட இடங்களில் பார்க்கும்போதெல்லாம் கல்வீசியும், கத்தியால் தாக்கிக்கொள்வதும் நடந்தேறுகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர் சச்சின், 20, பயணித்தார்.
இவர், இதற்கு முன் ரயிலில் நடந்த மாணவர்கள் இடையேயான மோதலில் ரயில்வே போலீசாரால் பிடிக்கப்பட்டார். போலீசார் அறிவுரைப்படி, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று பயணித்த ரயிலில், மாநில கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பயணித்துள்ளனர். அவர்களிடம் சென்று சச்சின் வாக்குவாதம் செய்துள்ளார். 'உங்களால்தான் நான் தினமும் காவல் நிலையத்திற்கு அலைகிறேன்' எனக்கூறி சண்டையிட்டுள்ளார்.
இதனால், இரு கல்லுாரி மாணவர்களும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர் சச்சினுக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்கள் தாக்கிக்கொண்டதால், அங்கிருந்த பயணியர் பீதியடைந்தனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்படி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, சச்சின், 20, மாநில கல்லுாரி மாணவர்களான கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த குமார், 18, திருவல்லிக்கேணி பாஸ்கர், 19, பொன்னேரி மோகன்ராஜ், 19, ஆகிய நால்வரை, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
அதேபோல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயிலில், பச்சையப்பன் - நந்தனம் கல்லுாரி மாணவர்கள், கடந்த 11ம் தேதி மாலை அடித்துக்கொண்டனர். யார் 'ரூட் தல' என்பதில், அவர்களுக்கு இடையே பிரச்னை வெடித்தது.
ரயிலில் வாக்குவாதம் செய்த அவர்கள், குரோம்பேட்டை நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு கல்லுாரி மாணவர்களும், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதில், பச்சையப்பன் கல்லுாரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆகாஷ், 18, என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, நந்தனம் கல்லுாரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

