ஜூன் 10, 2026 01:58 PM
ஜூன் 10, 2026 01:58 PM

மருத்துவ சேவைக்காக மெடிக்கல் கவுன்சில் என்று ஒன்று இருப்பது போல, மருத்துவத் துறையில் மருத்துவர்களுக்கு தோள் கொடுக்கும் துறைகளான, துணை மருத்துவத் துறைகளுக்கும் ஒரு தேசிய துணை மற்றும் சுகாதாரத் தொழில்கள் ஆணையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதற்கென தேசிய துணை மற்றும் சுகாதாரத் தொழில்கள் ஆணையச் சட்டம் 2021ல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அச்சட்டம், மருத்துவ ஆய்வக அறிவியலை மிக முக்கியமான நோயறிதல் துறைகளில் ஒன்றாக அங்கீகரித்து, பல சிறப்பு சுகாதாரத் தொழில்களை அங்கீகரிக்கிறது. இந்த ஆணையத்தின் கீழ், மனிதனின் சுகாதார மேம்பாட்டுக்காக மருத்துவத் துறையில் இயங்கும் பல துணை மருத்துவப் படிப்புகளை பட்டியலிடுகிறது.
"நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என திருவள்ளுவர் கூறுவது போல, நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் நோய் இது தான் என கண்டுபிடித்து கூறுவதில் மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் எனப்படும் மெடிக்கல் லெபாரட்டரி சைன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமீபத்தில் உலகில் பல மக்களுக்கு ஏற்பட்ட கோவிட் 19, தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்துச் சொன்ன துறை மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல்.
இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரம் அடைந்த போது ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் 32 முதல் 42 வருடங்களாக இருந்தது. 2023 வருடத்திய கணக்கெடுப்பின்படி 68 முதல் 72 வருடங்களாக உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியுமே ஆகும். அதன் பின்னணியில் இருப்பவர்கள் மருந்தாளுநர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ ஆய்வுக்கூட அறிவியலாளர்கள் தான்.
மேலும் கோவிட் 19 காலத்தில், நோய்த்தடுப்பு மருந்துகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஷின் கண்டுபிடிப்பின் பின்னணியில் இந்த மருத்துவ ஆய்வுக்கூட அறிவியலாளர்களும் முக்கிய பங்காற்றினார்கள். அந்த வகையில் மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் மருத்துவர்களுக்கே ஒரு நோயை அடையாளம் காட்டக்கூடிய ஒரு துறை எனலாம்.
இந்தத் துறையில் பல நிலைகள் உள்ளன. நான்கு வருட மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் பட்டப்படிப்பில் மருத்துவ ஆய்வக அறிவியல் வல்லுநர்கள் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், இரத்தவியல், திசுநோயியல், நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு நோயறிதல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பின் போதே பயிற்சி பெறலாம். எனவே, பட்டம் பெற்றவுடன் உடனே ஒரு மருத்துவமனையில் அல்லது ஆய்வுக்கூடத்தில் பணியில் சேரலாம்.
மேலும், பட்டப்படிப்பு முடித்தவுடன், அதில் மேலும் சிறப்பு பெற மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம். அதற்கும் மேல் இந்த துறையில் சிறப்பிடம் பெற, குறிப்பிட்ட துறைகளில் மருத்துவ ஆய்வக அறிவியல் வல்லுநர்கள் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், இரத்தவியல், திசுநோயியல், நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு நோயறிதல் போன்ற பாடங்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்று அறிவியலறிஞர்கள் ஆகலாம்.
- முனைவர் அ.போ.இருங்கோவேள், மேலாளர், மருத்துவ சமூகவியல், தி சங்கர நேத்ராலயா மற்றும் டாக்டர் வந்தனா, மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் கல்வித்துறைத் தலைவர் மற்றும் அசோஷியேட் பேராசிரியர், தி சங்கர நேத்ராலயா.
