ADDED : செப் 13, 2025 05:57 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் ராணுவ அதிகாரி எனக்கூறி பொது மக்களை ஏமாற்றிய 48 வயது பெண்ணை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ராணுவ சீருடை மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெண், தன்னை ராணுவ அதிகாரி எனக்கூறி சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அப்பெண்ணின் பெயர் ருச்சிகா ஜெயின் என தெரியவந்தது. இவர், ராணுவத்தில் கேப்டனாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது அடையாள அட்டையை சோதித்தபோது, அவர் தெரிவித்தது பொய் என கண்டறியப்பட்டது.
அப்பெண்ணின் உடைமையை சோதனையிட்ட போலீசார் போலி ராணுவ சீருடைகள், அவரது பெயர், புகைப்படங்களுடன் கூடிய பேட்ஜ், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ருச்சிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.