சட்டசபையில் இருந்து கவர்னர் ஏன் வெளியேறினார்?: அண்ணாமலை அடுக்கிய காரணங்கள்!
சட்டசபையில் இருந்து கவர்னர் ஏன் வெளியேறினார்?: அண்ணாமலை அடுக்கிய காரணங்கள்!
ADDED : பிப் 13, 2024 02:48 PM

சென்னை: 'சபாநாயகர் திமுக எம்.எல்.ஏ., போல பேசியதால், கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கவர்னர் உரை
மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபையில் திமுக தொண்டரை விட மோசமானவராக சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டார். கவர்னர் அவரின் கருத்தை வெளிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் கட்சி சார்ந்து பேசினார். சபாநாயகர் அவர் கட்சி சார்ந்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. கவர்னருக்காக எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் இடம்பெற்று இருந்தது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு மிக குறைந்த தொகையே கிடைத்தது. மழையை கையாண்டதற்காக ஆளும் கட்சிக்கு பாராட்டு என கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். முதல்வரின் சுயபுராணத்தை பாட கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். சபாநாயகர் திமுக எம்.எல்.ஏ., போல பேசியதால் கவர்னர் சட்டசபையில் இருந்து எழுந்து சென்றார்.
தேசிய கீதம்
அரசு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடனும், தேசிய கீதத்துடனும் துவங்க வேண்டும், முடியும்போது தேசிய கீதத்துடன் முடிய வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நிலைப்பாடு. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறோம். அமைச்சருக்கு செய்யும் வேலைக்காக சம்பளம் தருகிறோம். ஊழல் வழக்கில் கைதான ஒரு அமைச்சருக்கு மக்கள் வரிபணத்தில் சம்பளம் கொடுத்து இலாகா இல்லாத அமைச்சராக 8 மாதமாக வைத்து இருக்கிறார்கள்.
பா.ஜ.,வுக்கு வெற்றி
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமின் கிடைக்குமா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் ஜாமின் குறித்து விவாதிக்கலாம் என நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பதிலே யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. செந்தில் பாலாஜி ராஜினாமாவை பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். நல்லாட்சி
செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டு வருவதற்காக இன்னும் ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பியை சரண்டர் செய்வார்கள். தேர்தல் வருவதால் அவரை வைத்து சில வேலைகளை பார்க்கலாம் என அவர்கள் திட்டமிடுகிறார்கள். வடசென்னை தொகுதியில் பிரதமர் மோடியின் நல்லாட்சி வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

