வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை
வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை
ADDED : செப் 22, 2025 08:40 AM

புதுடில்லி: ''வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., ரூ.37,000 கோடியுடன் முதலிடத்தில் உள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளது,'' என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் பொருளாதார செயல்திறன் குறித்து மத்திய தணிக்கையாளர் ஆய்வில், 16 மாநிலங்கள் வருவாய் உபரியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெளியாகி உள்ள சிஏஜி அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2022- 23ம் நிதியாண்டில் வருவாய் உபரியுடன் 16 மாநிலங்கள் உள்ளன.
வருவாய் உபரி
ரூ.37,000 கோடி வரி உபரியுடன் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அடுத்தபடியாக குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.28,592 கோடி), தெலுங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராக்கண்ட் (ரூ.5,310 கோடி), மத்தியப் பிரதேசம் (ரூ.4,091 கோடி) மற்றும் கோவா (ரூ.2,399 கோடி) வருவாய் உபரி உடன் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிபூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவையும் இதில் அடங்கும். வருவாய் உபரியுடன் கூடிய 16 மாநிலங்களில், 10 மாநிலங்களில் பாஜ தலைமையிலான ஆட்சி தான் நடக்கிறது. அதேநேரத்தில், 2022-23ம் ஆண்டில், 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியது கண்டறியபபட்டது.
வருவாய் பற்றாக்குறை
இதில் ஆந்திரப் பிரதேசம் (ரூ.43,488 கோடி), தமிழகம் (ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (ரூ.27,295 கோடி), பஞ்சாப் (ரூ.26,045 கோடி), ஹரியானா (ரூ.17,212 கோடி), அசாம் (ரூ.12,072 கோடி), பீஹார் (ரூ.11,288 கோடி), ஹிமாச்சலப் பிரதேசம் (ரூ.26,336 கோடி), கேரளா (ரூ.29,226 கோடி), மஹாராஷ்டிரா (ரூ.1,936 கோடி) மற்றும் மேகாலயா (ரூ.44 கோடி) ஆகியவை பற்றாக்குறையை கொண்டுள்ளன.
மானியங்கள்
மத்திய அரசின் வருவாய் மானியங்களால் மீண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம், கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை இருப்பதால் வருவாய் பற்றாக்குறையில் வேகமாக மீண்டு வருகிறது.
மேற்கு வங்கம் தனது வருவாய் வரவுகள் மற்றும் செலவினங்ககளை சமாளிக்க 16 சதவீதம் மானியங்களை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா 15%, ஆந்திரப் பிரதேசம் 12%, ஹிமாச்சலப் பிரதேசம் 11% மற்றும் பஞ்சாப் 10% மானியங்களை பெற்று இருக்கிறது.மாநிலங்கள் மொத்தம் ரூ.1,72,849 கோடியை நிதி ஆணைய மானியங்களாகப் பெற்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.