ADDED : பிப் 07, 2025 04:57 AM

மாதநாயக்கனஹள்ளி: மாண்டியாவை சேர்ந்தவர் சதீஷ். கான்ட்ராக்டரான இவர், பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே சீகேஹள்ளியில், மூன்று மாடி கட்டடம் கட்டி வருகிறார். இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டடத்தில் தங்கி இருந்து அங்கேயே சமையல் செய்தும் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் கட்டடத்தின் 2வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது, இரண்டு பேர் உடல் கருகி இறந்தது தெரிந்தது. விசாரணையில், உயிரிழந்தவர்கள் பீஹாரின் ரோஷன், 23, உத்தர பிரதேசத்தின் உதய் பானு, 40 என்பது தெரிந்தது.
கட்டட பணிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுத்து வேலை நடந்து வந்தது. மரத்தை மெருகூட்ட தின்னர் பயன்படுத்தப்பட்டது. அதன் அருகில் ரசாயன பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. மின்கசிவால் ஏற்பட்ட தீ, ரசாயன பொருட்கள் மீது பரவி எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

