ADDED : மே 16, 2024 09:50 PM
புதுடில்லி:குடோனில் மூன்று நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த கூலித் தொழிலாளியை போலீசார் மீட்டனர். அவரது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மோதி நகர், கரம்புராவை சேர்ந்தவர் ஜீது, 30. இவர் திருமண மண்டபங்களில் உணவு பரிமாறும் வேலை செய்கிறார். கடந்த 11ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் திரும்பி வரவில்லை. அவரை அவரது அண்ணன் பிரமோத் சர்மா தேடினார்.
அதே பகுதியில் ஒரு குடோனில் ஜீது அடைத்து வைக்கப்பட்டிருந்ததை 14ம் தேதி கண்டுபிடித்தார். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜீதுவை மீட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜீதுவின் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்ற லக்கன், 54, சோனு சிங், 33, மணீஷ், 28, முகேஷ், 34, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் 11ம் தேதி ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறு தகராறில் ஜீதுவை நால்வரும் சேர்ந்து சிறை வைத்ததும், வேளாவேளைக்கு அவருக்கு உணவு வழங்கி நன்றாக கவனித்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

