தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு
ADDED : மார் 23, 2024 11:07 PM

பெங்களூரு: கடந்த சில வாரங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடா நேரடியாக தலையிட்டதால், கர்நாடகாவில் மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகளை ம.ஜ.த.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அதிருப்தி அடைந்துள்ளார்.
கர்நாடகாவில் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள ம.ஜ.த.,வும்; சட்டசபை தேர்தலில் வாங்கிய 'அடி'யை லோக்சபா தேர்தலில் வாங்கக்கூடாது என்பதால் பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ளன.
லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுக்கு ஐந்து தொகுதிகள் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. அதன் பின், மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகளை பா.ஜ.,விடம் ம.ஜ.த., தலைவர்கள் கேட்டு வந்தனர்.
இதை விட்டுக் கொடுக்க உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் மறுத்து வந்தனர். இதனால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.
அதிருப்தி
இதன் காரணமாக சமீபத்தில் ஷிவமொகாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்திற்கு கூட ம.ஜ.த., தலைவர்களுக்கு மரியாதைக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ம.ஜ.த., வட்டாரம் அதிருப்தி அடைந்தது.
மாநிலத் தலைவர் வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் கண்டனமும் தெரிவித்தது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பின், குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக மாநிலத் தலைவர் குமாரசாமி சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த இடைவெளியில் காங்கிரசார் தங்கள் 'வேலை'யை துவங்கிவிட்டனர். ம.ஜ.த., - எம்.எல்.சி., மரிதிப்பே கவுடாவை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டனர்.
டில்லி பயணம்
கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தை போக்குவதற்காக, கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, நேற்று காலை திடீரென புதுடில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பா.ஜ., மேலிட தலைவரான அமித் ஷா உட்பட தலைவர்களை சந்தித்து, தன் அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பெங்களூரில் பா.ஜ., தேர்தல் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், “தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன,” என அறிவித்தார்.
இதனால், மாநிலத்தில் கூட்டணியில் ஏற்பட்டிருந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.
கட்சிக்காக தியாகம்
தற்போது கோலார் பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள முனிசாமி, மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதற்காக, புதுடில்லியில் மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசி வந்தார். அதற்குள், கோலார் ம.ஜ.த.,வுக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பா.ஜ., ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது.
மீதமுள்ள பெலகாவி, ராய்ச்சூர், உத்தர கன்னடா, சித்ரதுர்கா, சிக்கபல்லாபூர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சுமலா போட்டி?
மாண்டியா தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ., தலைவர்களை சந்தித்து, சுயேச்சை எம்.பி., சுமலதா கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால், மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்ததால், சுமலதா அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக தன் ஆதரவாளர்களிடம் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அடுத்தகட்ட முடிவு குறித்து தன் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.
மீண்டும் சுயேச்சையாக போட்டியிடலாமா அல்லது பா.ஜ., இன்னும் அறிவிக்காத ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார்.

