எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : டிச 16, 2024 06:04 PM

புதுடில்லி: சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பயன்படுத்த, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருது மற்றும் ரொக்கப்பரிசு நேற்று வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த விருது அறிவிக்கப்பட்டதும், முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எம்.எஸ்.சுப்புலட்சுமியை இழிவாகப் பேசிய கிருஷ்ணாவுக்கு, இந்த விருதை வழங்கக்கூடாது' என்று கூறிய முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர், ஏற்கனவே தாங்கள் பெற்ற மியூசிக் அகாடமி விருதை திரும்பக் கொடுத்தனர்.
இந்நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், தன் பாட்டி பெயரில் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு நீதிபதி கொண்ட பெஞ்ச், முதலில் விருது வழங்க தடை விதித்தது. மேற்கொண்டு விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விருது வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவருடைய மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், விருதை பயன்படுத்த கிருஷ்ணாவுக்கு தடை விதித்தனர்.
நீதிபதிகள் அளித்த உத்தரவில், சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பயன்படுத்த கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவர் என்று டி.எம்.கிருஷ்ணா பிரகடனப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

