ADDED : பிப் 01, 2024 11:01 PM

ராமதுர்காவின் முள்ளூர் மலையில் உள்ள உயரமான சிவபெருமான் சிலை, முருடேஸ்வராவை நினைவூட்டுகிறது. சிவ சரணர்களின் சொர்க்கமாக உள்ளது.
உத்தரகன்னடா, பட்கலில் உள்ள முருடேஸ்வரா சிவாலயம், கடற்கரை அருகில் அமைந்துள்ளது.
இங்கு உயரமான இடத்தில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கர்நாடகாவில் இதுவே, உயரமான சிவன் சிலை என, பலர் கருதுகின்றனர். ஆனால் ராமதுர்காவில் உள்ள, முள்ளூர் மலையில் அமைந்துள்ள சிவலிங்கம், முருடேஸ்வராவை நினைவூட்டுகிறது.
பெலகாவி, ராமதுர்காவில் உள்ள முள்ளூர் மலை, சிவகிரி மலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோவில் ராமேஸ்வரர் கோவில் என, அழைக்கின்றனர்.
திருத்தலமாக விளங்கும் மலையில், 75 அடி உயரமான பிரமாண்ட சிவன் சிலை உள்ளது. சிவனின் எதிரே, 21 அடி உயரமான நந்தி விக்ரகம் உள்ளது. சிவனின் கீழ்ப்புறம் தியான மந்திர் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் உட்பிரகாரத்தில், சிவ தாண்டவம், திரிலோக சஞ்சாரம், கோகர்ணவின் ஆத்ம லிங்கம், அர்த்த நாரீஸ்வரர் உட்பட பல்வேறு ஓவியங்கள், கற்சிலைகள் பக்தர்களை ஈர்க்கின்றன.
கோவிலில் தினமும் பூஜை நடக்கிறது. இங்குள்ள சிவலிங்கம், கர்நாடகாவின் மூன்றாவது, நாட்டின் எட்டாவது மிகப்பெரிய சிலை என்ற பெருமை பெற்றுள்ளது.
கோவில் அருகிலேயே சாலுமரத திம்மக்கா பூங்கா உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ராமதுர்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் சிவகிரி மலை உள்ளது.
பெலகாவிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், சிவகிரி மலையை தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.
மறந்தால் அற்புதமான திருத்தலம் மற்றும் சுற்றுலா தலத்தை காணும் வாய்ப்பை இழப்பீர்கள்.
இயற்கை அழகு கொட்டி கிடக்கும், பசுமையான சூழலில் கோவில் அமைந்துள்ளது
- நமது நிருபர் - .

