தேர்தல் முடிவுக்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: அமித்ஷா புது தகவல்
தேர்தல் முடிவுக்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: அமித்ஷா புது தகவல்
ADDED : மே 23, 2024 04:08 PM

லக்னோ: 'லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முதல் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பா.ஜ., 310 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கூட தாண்டவில்லை. அகிலேஷ் யாதவுக்கு 4 தொகுதிகள் கூட கிடைக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் விரைவில் மீட்போம்.
இடஒதுக்கீடு
பாகிஸ்தான் இடம் அணுகுண்டுகள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். பா.ஜ., வினர் அணுகுண்டுகளுக்கு பயப்படுவதில்லை. எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.,க்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறது. இண்டியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கூட இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
3வது இடம்
ஒருபுறம், இத்தாலி, தாய்லாந்து, பாங்காக் என்று ராகுல் செல்கிறார். ஆனால் 23 ஆண்டுகளாக லீவு எடுக்காமல், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை நரேந்திர மோடி கொண்டாடுகிறார். 3வது முறையாக மோடி பிரதமர் ஆகுவார். இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

