உள்நாட்டில் தயாரிப்பட்ட 'பரம் ருத்ரா' சூப்பர் கம்ப்யூட்டர் : அர்ப்பணித்தார் பிரதமர்
உள்நாட்டில் தயாரிப்பட்ட 'பரம் ருத்ரா' சூப்பர் கம்ப்யூட்டர் : அர்ப்பணித்தார் பிரதமர்
ADDED : செப் 27, 2024 02:16 AM

புனே,உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'பரம் ருத்ரா' என்ற மூன்று சூப்பர் கம்யூட்டர்களை, பிரதமர் மோடி, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தின்கீழ், 130 கோடி ரூபாய் செலவில் மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. பரம் ருத்ரா என அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன.
அதிதிறனுடைய இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவை புனே, டில்லி மற்றும் கோல்கட்டாவில் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டம் 2015ல் துவங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, ஸ்டார்ட் - அப் நிறுவனங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்று ஆதிக்கம் செலுத்துகிறது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வானிலை ஆய்வுகளுக்காக 850 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள உயர்திறன் படைத்த கணினி அமைப்புகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
வழக்கமான கம்ப்யூட்டர்களை விட சூப்பர் கம்ப்யூட்டர்கள் 1,000 மடங்கு வேகமாக இயங்கும். சாதாரண கம்ப்யூட்டர்கள் ஆண்டு கணக்கில் செய்யும் பணிகளை, சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில நிமிடங்களில் செய்யும்.

