'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி: மீண்டும் சாதித்தது டி.ஆர்.டி.ஓ.,
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி: மீண்டும் சாதித்தது டி.ஆர்.டி.ஓ.,
ADDED : ஜன 01, 2026 12:26 AM

புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் சோதனைக்காக அடுத்தடுத்து ஏவப்பட்ட இரண்டு 'பிரளய்' ஏவுகணைகள் வெற்றிகரமாக பாய்ந்தன.
நம் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறு தயாரிக்கப்படும் ஆயுதங்களும், ஏவுகணைகளும், டி.ஆர்.டி.ஓ.,வால் சோதனை செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில், போர்க்கள பயன்பாட்டிற்காக 'பிரளய்' என்ற குறுகிய துார ஏவுகணை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய், அதன் உயர் துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற, ஒரு திடமான உந்துசக்தி கொண்ட ஏவுகணையாகும்.
பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ஏவுகணை, 150 முதல் 500 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும்.
இந்த நிலையில், ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து, டி.ஆர்.டி.ஓ., இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்தது.
இரு ஏவுகணைகளும் திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.
இந்த வெற்றி ஏவுகணையின் நம்பகத் தன்மையை நிரூபித்துஉள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

