உ.பி.,யில் பிரபல தாதா முக்தர் அன்சாரி உயிரிழப்பு: விசாரணை நடத்த குழு அமைப்பு
உ.பி.,யில் பிரபல தாதா முக்தர் அன்சாரி உயிரிழப்பு: விசாரணை நடத்த குழு அமைப்பு
UPDATED : மார் 29, 2024 04:27 PM
ADDED : மார் 28, 2024 11:01 PM

லக்னோ : உ.பி.,யில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி, 63 மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மாஜீஸ்திரேட் உத்தரவிட்டு உள்ளார். உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மவ் சதார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில், ஐந்து முறை பதவி வகித்தவர் முக்தார் அன்சாரி, 63 பிரபல தாதாவான இவர் மீது, பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் மீதான வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்த போது விசாரணை கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் இன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து பாண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்சாரி இறந்ததையடுத்து மவ் சதார் , காசிப்பூர், பாண்டா ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால், முக்தர் அன்சாரியின் மகன், தனது தந்தை ‛ ஸ்லோ பாய்சன் ' கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்'' எனக்கூறினார்.
இதனையடுத்து, முக்தர் அன்சாரி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

