கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் பிரதமர் மோடி கண்டனம்
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் பிரதமர் மோடி கண்டனம்
ADDED : செப் 11, 2025 12:41 AM

புதுடில்லி:கத்தார் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் அமைப்பின் உயர் அரசியல் தலைவர்கள் வசிப்பிடத்தை குறிவைத்து, இஸ்ரேலிய விமானப் படைகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தின. இதில், கலில் அல் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது.
அதே போல், கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால், அந்நாடு இஸ்ரேல் மீது ஆத்திரம் அடைந்தது. 'இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்று கடுமையாக விமர்சித்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபிய தலைவர்கள் கத்தாருக்கு விரைந்து சென்று, தங்களது ஆதரவை வழங்கியதுடன், இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியனும், இந்த தாக்குதல் எதிரொலியால் இஸ்ரேல் அமைச்சர்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நம் பிரதமர் மோடி, தன் கவலையை பகிர்ந்து கொண்டார்.
'கத்தாரின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது' என, தெரிவித்தார்.
இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட, பிரதமர் மோடி, 'இருதரப்பு பேச்சு, துாதரக ரீதியிலான நடவடிக்கைகள் வாயிலாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அதை விடுத்து, மோதல் போக்கை கடைப்பிடிப்பதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், இந்தியா நிச்சயம் அதை எதிர்க்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.