முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ADDED : செப் 15, 2025 04:08 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு நடக்கிறது. சீர்திருத்தங்களின் ஆண்டு - எதிர்காலத்திற்கான மாற்றம் என்ற கருப்பொருளில் இன்று முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எல்லை பாதுகாப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக முப்படைகளின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்துகின்றனர். குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். மேலும், முப்படை தளபதிகளுடன் கலந்துரையாடினார். இந்த மாநாட்டில் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படைகள் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், நாட்டை கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பீஹாருக்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.