தமிழகத்தில் ஓ.பி.எஸ்., பெயர் போல இங்கேயும்... 'ரிப்பீட்டு!'; பெங்களூரு ரூரலில் 3 சுரேஷ், 5 மஞ்சுநாத் போட்டி
தமிழகத்தில் ஓ.பி.எஸ்., பெயர் போல இங்கேயும்... 'ரிப்பீட்டு!'; பெங்களூரு ரூரலில் 3 சுரேஷ், 5 மஞ்சுநாத் போட்டி
ADDED : ஏப் 07, 2024 05:42 AM

பெங்களூரு : தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரில் ஐந்து பேர் வேட்புமனு தாக்கல் செய்தது போன்று, பெங்களூரு ரூரல் தொகுதியில், பா.ஜ., - காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயரில் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை வாபஸ் பெறவைக்கும் முயற்சியில், இரு கட்சிப் பிரமுகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் என்றாலே, முக்கிய நபரை தோற்கடிக்க ஆளும் கட்சி வேட்பாளர் பெயரில் எதிர்க்கட்சியினரும்; எதிர்க்கட்சி வேட்பாளர் பெயரில் ஆளும் கட்சியினரும் அதே பெயர் உள்ள நபர்களை சுயேச்சையாக களமிறக்கி குழப்பத்தை ஏற்படுத்துவர். பின், இரு கட்சியினரும் சம்பந்தப்பட்ட சுயேச்சை வேட்பாளரை சந்தித்து, வாபஸ் பெற வைப்பர்.
அதுபோன்று, லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றியை தடுக்கவே, அதே பெயர் உள்ள ஐந்து பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேசும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தும் போட்டியிடுகின்றனர்.
இருவரின் போட்டியால் தேசிய அளவில் இத்தொகுதி மீது பார்வை விழுந்துள்ளது. ராம்நகர் மாவட்டத்தில் 'டிகே சகோதரர்களின்' பலத்தை கட்டுப்படுத்த, ம.ஜ.த., - பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இரு வாக்காளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் பெயரில் வேறு வேட்பாளர்களும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகா கட்சி சார்பில் ஆனேக்கலின் முத்தநல்லுாரை சேர்ந்த எஸ்.சுரேஷ், கனகபுராவின் மஹலே கிராமத்தை சேர்ந்த எம்.என்.சுரேஷ் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துஉள்ளனர்.
அதுபோன்று, சன்னராயபட்டிணாவை சேர்ந்த பகுஜன் பாரத் கட்சி வேட்பாளராக சி.என்.மஞ்சுநாத், பெங்களூரை சேர்ந்த சி.மஞ்சுநாத், என்.மஞ்சுநாத், கே.மஞ்சுநாத் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களின் போட்டியால், ஓட்டுகள் சிதறிவிடுமோ என்ற அச்சத்தில் இரு கட்சி வேட்பாளர்களும் உள்ளனர். வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால், அதற்குள் தங்கள் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் பேசி, மனுவை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் பா.ஜ., காங்கிரஸ் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

