ADDED : செப் 19, 2024 06:08 AM

துமகூரு: உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதியவர் உடலை, ஆம்புலன்சில் ஏற்ற மறுத்ததால், பைக்கில் வைத்து மகன்கள் எடுத்து சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துமகூரு, பாவகடா தலவாய்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னுாரப்பா, 80; வயோதிகம், உடல்நலக் குறைவால் சில நாட்களாக படுத்த, படுக்கையாக இருந்தார்.
நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. ஆம்புலன்சில் ஒய்.என்.ஹொஸ்கோட்டில் உள்ள, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
மருத்துவமனை முன் நின்ற ஆம்புலன்சில், ஹொன்னுாரப்பா உடலை எடுத்து செல்ல, அவரது மகன்கள் முடிவு செய்தனர்.
ஆனால் இறந்தவர் உடலை ஏற்ற மாட்டோம் என்று, ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ ஊழியர் கூறினர். அவர்களிடம் எவ்வளவோ பேசி பார்த்தும், பலன் இல்லை.
இதனால் ஹொன்னுாரப்பா உடலை பைக்கில் வைத்து, அவரது இரு மகன்கள் எடுத்து சென்றனர். ஒரு மகன் பைக் ஓட்டினார். ஹொன்னுாரப்பா உடலை நடுவில் அமர வைத்து, இன்னொரு மகன் பிடித்து இருந்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ ஊழியர் மீது, மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.
அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா இருவரும் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் சொந்த ஊரில் இந்த அவலம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

