ADDED : டிச 27, 2024 05:38 AM

நந்தினி லே - அவுட்: 'எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது' என, சுரேஷ் உள்ளிட்டோர் மீது, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா போலீசில் புகார் செய்து உள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. இவர் மீது நேற்று முன்தினம் லக்கரே லட்சுமிதேவி நகரில் வைத்து, முட்டை வீசப்பட்டது. ஆசிட் முட்டை வீசி தன்னை கொல்ல சதி நடப்பதாக சம்பவ இடத்திலேயே முனிரத்னா குற்றம் சாட்டினார். மல்லேஸ்வரம் கே.ஜி., ஜெனரல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மதியம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
இந்நிலையில் நந்தினி லே - அவுட் போலீஸ் நிலையத்தில் முனிரத்னா நேற்று அளித்த புகார்:
கடந்த 5ம் தேதி வக்கீல்கள் உடை அணிந்து வந்த இருவர், என்னிடம் பேசினர். 'உனக்கு நேரம் சரி இல்லை. ஒழுங்காக வீட்டில் இரு. வெளியே வந்து அரசியல் செய்தால் கொன்று விடுவோம். உன் மீது இன்னொரு பலாத்கார வழக்கு போடுவோம். எங்கள் சகோதரர் சுரேஷ் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
குஸ்மா அமைச்சராக வேண்டும் என்று சுரேஷ் ஆசைப்படுகிறார். லோக்சபா தேர்தலில் தோற்றதால் வருத்தத்தில் உள்ளார். ஒழுங்காக ராஜினாமா செய்தால் உயிர் பிழைப்பாய். இல்லை என்றால் நீ பங்கேற்கும் நிகழ்ச்சியில், உன் மீது ஆசிட் வீசப்படும். ஆடைகளை கிழித்து செருப்பு மாலை அணிந்து அழைத்து செல்வோம்' என்று மிரட்டினர்.
இந்த மிரட்டலுக்கு பின்னணியில், காங்., முன்னாள் எம்.பி., சுரேஷ், காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராயப்பா, அவரது மகள் குஸ்மா உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடையாளம் தெரியாத 150 பேர் என்னை தாக்க முயன்றனர்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்களாக புகாரில் குறிப்பிட்டவர்கள் மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுரேஷ், ஹனுமந்தராயப்பா, குஸ்மா மீது வழக்கு பதியவில்லை.

