கல் உடைத்தவரை எம்.பி., ஆக்கினால் சுரேஷ் குறித்து குமாரசாமி கிண்டல்
கல் உடைத்தவரை எம்.பி., ஆக்கினால் சுரேஷ் குறித்து குமாரசாமி கிண்டல்
ADDED : பிப் 02, 2024 10:58 PM

ராம்நகர்: ''கல் உடைத்தவரை எம்.பி., ஆக்கினால், நாட்டை உடைக்க தான் முயற்சி செய்வார்,'' என்று, எம்.பி., சுரேஷ் பற்றி, முன்னாள் முதல்வர் குமாரசாமி கிண்டல் அடித்தார்.
ராம்நகர் பிடதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று அளித்த பேட்டி:
மத்திய அரசு, கர்நாடகாவுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும், அநீதி இழைப்பதாகவும் எம்.பி., சுரேஷ் கூறி உள்ளார்.
நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். சுரேஷ் இங்கு கல் உடைத்தவர். கல் உடைத்தவரை எம்.பி., ஆக்கினால், நாட்டை உடைக்க தான் நினைப்பார். அப்படிபட்டவரிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
மத்திய அரசை நம்ப வேண்டும். மத்திய அரசுடன் மோதி, நாம் எதையும் சாதிக்க முடியாது. சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளால் பிரச்னையை தீர்க்க முடியாது.
நிதி கமிஷன் அதிகாரிகள் மாநிலங்களில் ஆய்வு செய்து, எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று அறிக்கை தருகின்றனர். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
நாட்டின் முதல் பட்ஜெட் மதிப்பு 174 கோடி ரூபாய். அப்போதே நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே, நிதி கமிஷன் அமைக்கப்பட்டது. மோடி பிரதமர் ஆனதும், நிதி கமிஷன் துவங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

