ADDED : பிப் 12, 2024 10:03 PM

திருவனந்தபுரம் :“ரேஷன் கடைகளில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ் கூறுகையில், ''கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய
பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
''அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
இது குறித்து, ஐ.யு.எம்.எல்., - எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன்
கூறுகையில், ''ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை.
''லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்,'' என்றார்.

