கொசுவலைக்குள் தூங்கிய கெஜ்ரிவால்: சிறையில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன?
கொசுவலைக்குள் தூங்கிய கெஜ்ரிவால்: சிறையில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன?
ADDED : ஏப் 02, 2024 12:29 PM

புதுடில்லி: திஹார் சிறையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறை எண் 2ல் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த அறையில் தனி கழிவறை வசதி உள்ளது. நேற்று இரவு கொசுவலைக்குள் அவர் தூங்கியதாக தெரியவந்துள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் கைதான டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து நேற்று( ஏப்.,01) மாலை 6 மணியளவில் சிறைக்குள் வந்தார். அவர் கேட்ட ராமாயணம் மற்றும் பகவத் கீதை புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
சிறையில் அவர் அறை எண் 2 ல் அடைக்கப்பட்டு உள்ளார். 1 4 *8 அடி அளவு கொண்ட அறையில் கெஜ்ரிவால் மட்டும் உள்ளார். அந்த அறையில் தனி கழிவறை வசதி செய்யப்பட்டு உள்ளது. கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளதால், அறையில் அவருக்கு 4 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அறையில் சிசிடிவியும் உள்ளது.
கெஜ்ரிவாலின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டும் 24 மணி நேரமும் அவரது அறையில் உள்ள சிசிடிவி மற்றும் வெளியே உள்ள கேமராக்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எந்தவித அசம்பாவிதமும் நடப்பதை தடுக்கவும், அவர் சிறைக்குள் எங்கு சென்றாலும் 4 பேர் உடன் செல்வார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு உதவி செய்வதற்காக டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் உள்ள அறையில், டிவி வசதி உள்ளது. தலையணை, பெட்ஷீட், போர்வை வழங்கப்பட்டு உள்ளது.
சிறை விதிப்படி 6 பேர் அவரை சந்திக்கலாம்.அதன்படி சந்திக்க விரும்பும் பட்டியலில், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் 3 நண்பர்களின் பெயர்களை கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளார். சிறைக்குள் வந்ததும், கெஜ்ரிவால் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. கேண்டீனில், பழங்கள், டூத் பேஸ்ட், சாலட், பிஸ்கட்கள் வாங்குவதற்கு இந்த கணக்கில் குடும்பத்தினர் பணம் செலுத்துவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிழிவு நோய் காரணமாக கெஜ்ரிவாலுக்கு வீட்டில் தயாரித்த உணவுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
முதல்முறை அல்ல
கெஜ்ரிவால் சிறையில் இருப்பது இது முதல் முறை அல்ல. 2011ல் லோக்பால் மசோதாவுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட அன்னா ஹசாரே மற்றும் பலருடன் இணைந்து கெஜ்ரிவால் கைதாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.10 ஆயிரத்திற்கான பிணைத்தொகை செலுத்த தவறியதற்காக 2014ல் கெஜ்ரிவால் இரண்டாவது முறையாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது 3வது முறையாக அடைக்கப்பட்டுள்ளார்.

