தேர்தல் பிரசாரம் துவக்கியது ஆம்ஆத்மி புதிய கோஷத்தை அறிவித்தார் கெஜ்ரிவால்
தேர்தல் பிரசாரம் துவக்கியது ஆம்ஆத்மி புதிய கோஷத்தை அறிவித்தார் கெஜ்ரிவால்
ADDED : மார் 08, 2024 10:32 PM

லோக்சபா தேர்தல் ஏப்ரல் மற்றும் -மே மாதங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியைத் துவக்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ., முதல் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது.
வளம்
அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி பேச்சு என மும்முரமாக இருக்கின்றன.
டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ல ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.
'பார்லிமென்ட்டில் கேஜ்ரிவால் இருந்தால், டில்லி வளம் பெறும்' என்ற, புதிய கோஷத்துடன், லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை, ஆம்ஆத்மி நேற்று துவக்கியது.
தலைநகர் டில்லியில், காங்கிரசும் ஆம்ஆத்மியும் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றன. டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில், நான்கில் ஆம் ஆத்மியும், மூன்றில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.
ஆம் ஆம்தி நான்கு வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. தேர்தல் பிரசாரத்தையும், அதிகாரப்பூர்வமாக நேற்று துவக்கியது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் ஆகியோர் இணைந்து, தீன் தயாள் மார்க்கில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரசாரத்தில் 'பார்லிமென்ட்டில் கெஜ்ரிவால் இருந்தால், டில்லி மேலும் வளம் பெறும்' என்ற பிரசார கோஷம், அறிமுகப்படுத்தப்பட்டது.
மறக்க மாட்டேன்
இதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் பேசியதாவது:
சேவை செய்வதற்காக டில்லி மக்கள் எங்களுக்கு வாய்ப்பு தந்தனர் என்பதை என்றைக்கும் மறக்க மாட்டோம்.
அதற்கு நன்றி கூறும் விதமாகவே, எங்களது இந்த தேர்தல் பிரசார கோஷத்தைக்கூட வடிவமைத்துள்ளோம்.
நாட்டிலேயே, இரண்டு மாநிலங்களில்தான் 24 மணி நேரமும் தடையில்லாத மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஒன்று டில்லி. மற்றொன்று பஞ்சாப். இந்த இரண்டு மாநிலங்களிலுமே ஆம் ஆத்மி கட்சி முழுநேர மக்கள் சேவை செய்கிறது.
எப்போதெல்லாம் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என நாங்கள் முயற்சி செய்கிறோமோ, அப்போதெல்லாம் மத்திய அரசும், டில்லி கவர்னரும் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
இதற்கு டில்லி மக்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் ஒரு காரணம். டில்லிவாசிகள் சாதாரண மனிதனை, முதல்வராக தேர்வு செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை டில்லிவாசிகள் செய்த தவறாக நினைக்கின்றனர். ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் ஆம் ஆத்மியையே தேர்வு செய்வது மத்திய அரசுக்கு வெறுப்புணர்வை அதிகரித்துள்ளது.
தனி ஒருவன்
டில்லி அரசின் திட்டங்களை எல்லாம், தற்போதுள்ள பா.ஜ.,வின் ஏழு எம்.பி.,க்களும், நேரடியாக, கவர்னரிடம் எடுத்துச் சென்று தடுத்து நிறுத்தி வருகின்றனர். நான் தனி ஒருவனாக இந்த ஏழு பேரையும் எதிர்த்துக் கொண்டிருந்தேன்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஏழு தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றியை தாருங்கள். சிறிய மனிதனான எனக்கு, டில்லியின் மாபெரும் பொறுப்பை தந்தீர்கள்.
என்னை உங்கள் சேவகனாகத்தான் நினைக்கிறேன். முதல்வர் என்று ஒருநாளும் நினைத்ததே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
குஜராத் மாநிலத்தில் பாரூச், ஜாம்நகர் மற்றும் ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்ரா ஆகிய தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் குவஹாத்தி, திப்ரூகர் மற்றும் சோனித்பூர் ஆகியவற்றிலும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- நமது டில்லி நிருபர் -

