வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
UPDATED : ஜூலை 26, 2025 12:17 PM
ADDED : ஜூலை 26, 2025 11:05 AM

புதுடில்லி: ''கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று கார்கில் தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.
தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமும் அளிக்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போர் நினைவிடத்தில் மரியாதை
டில்லியில் உள்ள போர் நினைவிடத்தில், கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கார்கில் தினத்தன்று, நாட்டின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் நமது ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் தியாகம் காலத்தால் அழியாத நினைவூட்டல், அவர்களின் சேவைக்கு இந்தியா என்றும் கடமைப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.