மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
ADDED : டிச 31, 2025 08:03 AM

புதுடில்லி: 'ஷெல்ப் எம்' எனப்படும் மிகச்சிறிய அணு உலையை, அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி மற்றும் 'ராஸ்ஆட்டம்' இயக்குநர் அலெக்ஸி லிகாச்சேவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகளவிலான மின் உற்பத்தி திறனுக்காக அணு மின் நிலையங்கள் இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இதற்கிடையே எஸ்.எம்.ஆர்., அதாவது, 'ஸ்மால் மாடுலர் ரியாக்ட்டர்' எனும் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா, 'ஷெல்ப் எம்' எனும், மிகச் சிறிய அணு உலைகளை வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்ஆட்டம் இவற்றை வழங்க உள்ளது. இவற்றை 'மைக்ரோ அணு உலை' என்றும் அழைக்கிறார்கள். இந்த அணு உலையை அமைப்பதில் ஒரு பெரிய வசதி என்னவென்றால், இது முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட நிலையில் வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

