காணிக்கை எண்ணும் இடத்தில் ஐ.ஜி., : உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
காணிக்கை எண்ணும் இடத்தில் ஐ.ஜி., : உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
ADDED : டிச 20, 2025 05:38 AM

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் காணிக்கை எண்ணும் இடத்தில் கேரள போலீஸ் ஐ.ஜி. சென்றது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் காணிக்கையாக கிடைக்கும் பணம் கோயிலின் இடது புறம் உள்ள கட்டடத்தில் எண்ணப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சபரிமலைக்கு கேரள போலீஸ் ஐ.ஜி. சுந்தர் வந்தபோது அவர் காணிக்கை எண்ணும் இடத்துக்குள் சென்றார்.
அவருடன் சீருடையிலும், சீருடை அணியாமலும் போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.
இது தொடர்பாக தேவசம்போர்டுக்கு போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் கூறப்படவில்லை என தெரிகிறது.
இது பற்றி காணிக்கை தனி அதிகாரி சபரிமலை செயல் அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதற்கிடையில் கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு அலுவலர் ஆர். ஜெயகிருஷ்ணன் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
காணிக்கை எண்ணும் இடத்தில் போலீஸ் அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சென்றது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

