இங்கே எதிரிகள்; அங்கே தோழர்கள் கேரளாவில் மோடி கிண்டல்
இங்கே எதிரிகள்; அங்கே தோழர்கள் கேரளாவில் மோடி கிண்டல்
ADDED : பிப் 28, 2024 02:20 AM

திருவனந்தபுரம்,'கேரளாவில் பரம எதிரிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், மற்ற மாநிலங்களில் என்றும் உற்ற தோழர்களாக வலம் வருகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள திருவனந்தபுரத்துக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநில பா.ஜ.,வினரின் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார். திருவனந்தபுரத்தின், 'சென்ட்ரல்' மைதானத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் பேசியதாவது:
கேரளாவின் இடதுசாரி அரசை பாசிச அரசு என்றும், முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு ஊழல்களில் திளைப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரை தடியால் அடித்து விரட்டும் இடதுசாரி அரசு, முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பல்வேறு ஊழல்களை செய்ததாக பட்டியலிடுகிறது.
கேரளாவுக்கு வெளியே நடக்கும், 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில், காங்., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து சமோசா, டீ, பிஸ்கட் சாப்பிடுகின்றனர்.
கேரளாவில் தான் அவர்கள் பரம எதிரிகள்; மற்ற மாநிலங்களில், என்றும் உற்ற தோழர்களாக வலம் வருகின்றனர்.
அவர்கள் திருவனந்தபுரத்தில் ஒன்றை பேசுவர், டில்லியில் வேறொன்றை பேசுவர். இந்த துரோகத்துக்கு வரும் லோக்சபா தேர்தலில் கேரள மக்கள் பதில் அளிப்பர்.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுத்தரும்படி கேரள மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
எந்த மாநிலத்தையும் ஓட்டு வங்கியாக பா.ஜ., பார்ப்பதில்லை. கடந்த, 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழ்ந்த வளர்ச்சிகளை போலவே கேரளாவிலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
கேரள மக்களின் கனவு கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நனவாக்குவதே மோடியின் உத்தரவாதம்.
இவ்வாறு அவர் பேசினார்.

