அரசியல்வாதிகள் தப்பு செய்தாலும் அதிகாரிகள் அனுமதிக்க கூடாது மஹா., துணை முதல்வர் 'அட்வைஸ்'
அரசியல்வாதிகள் தப்பு செய்தாலும் அதிகாரிகள் அனுமதிக்க கூடாது மஹா., துணை முதல்வர் 'அட்வைஸ்'
ADDED : டிச 14, 2025 03:58 AM

நாக்பூர்: மஹாராஷ்டிராவில், நில பேர சர்ச்சையில் தன் மகன் பார்த் பவார் சி க்கி இருக்கும் சூழலில், அவரது தந்தையும், அம்மாநில துணை முதல்வருமான அஜித் பவார், “விதிகளை மீறிய நிலப் பத்திரங்களை பதிவு செய்வதை வருவாய் துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சமீபத்தில், துணை முதல்வரும், தேசியவாத காங்., தலைவருமான அஜித் பவாரின் மகன் பார்த் பவார், புனேவில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை, வெறும் 300 கோடி ரூபாய் கொடுத்து, தனக்கு சொந்தமான, 'அமேதியா' நிறுவனத்திற்காக வாங்கியதாக கூறப்பட்டது.
அதற்கான முத்திரைத்தாள் வரி, 21 கோடி ரூபாயையும் அவர் செலுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பத்திரப்பதிவுத் துறை இணை ஐ.ஜி., தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்தார்.
இந்த கமிட்டி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், பார்த் பவாரின் பெயர் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. இதனால், அதிகார துஷ்பிரயோகம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மீண்டும் விமர்சிக்க துவங்கின.
முத்திரைத்தாள் வரி 21 கோடி ரூபாயும், அதற்கான அபராத தொகையும் செலுத்தக் கோரி, பார்த் பவாருக்கு பத்திரப்பதிவுத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால், மஹாராஷ்டிரா அரசியலில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், “விதிகள் இடம் கொடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தை பதிவு செய்ய முடியாது என்பதை பத்திரப் பதிவாளர் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்,” என துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.
இதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர் சஞ்சய் ராவத், “துணை முதல்வரின் மகன் பார்த் பவார் ஒரு நிலத்தை பதிவு செய்ய நேரடியாக வரும்போது, அதை எதிர்த்து பேசும் துணிச்சல் வருவாய் துறை அதிகாரிகளுக்கு இருக்குமா,” என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

