மம்தா குறித்து தரக்குறைவான பேச்சு: பா.ஜ., வேட்பாளர் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை
மம்தா குறித்து தரக்குறைவான பேச்சு: பா.ஜ., வேட்பாளர் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை
ADDED : மே 21, 2024 03:32 PM

கோல்கட்டா: மேற்குவங்கம் மாநிலத்தின் தம்லுக் தொகுதி பா.ஜ., வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், முதல்வர் மம்தா குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இதற்காக அபிஜித் 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், தம்லுக் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இவர் மே 15ல் ஹால்டியா மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ''பா.ஜ., வேட்பாளர் அபிஜித் தெரிவித்த கருத்து பாலின ரீதியான தரக்குறைவான கருத்து. இது பெண்களுக்கு எதிரான மனநிலையை காட்டுவதாக உள்ளது.
அபிஜித் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தரக்குறைவான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என அபிஜித்துக்கு உத்தரவிட வேண்டும்,'' என கூறப்பட்டிருந்தது. அதன்படி, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக மே 20க்குள் விளக்கமளிக்க அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இன்று (மே 21) மாலை 5 மணி முதல் 24 மணிநேரத்திற்கு தம்லுக் தொகுதி பா.ஜ., வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அவர் இதுபோன்ற பேசுகையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்தது. அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதியில் மே 25ல் தேர்தல் நடைபெறுகிறது.

