சத்திரம்- - சபரிமலை காட்டு பாதை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிப்பு நடக்க முடியாதவர்கள் மீட்பு
சத்திரம்- - சபரிமலை காட்டு பாதை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிப்பு நடக்க முடியாதவர்கள் மீட்பு
ADDED : நவ 23, 2024 02:13 AM

மூணாறு:சத்திரம், சபரிமலை இடையே காட்டு பாதையில் குடிநீர், வெளிச்சம் இன்றி ஐயப்ப பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக காட்டு பாதையில் சபரிமலைக்கு பக்தர்கள் எளிதில் நடந்து செல்லலாம்.
அந்த பாதை நவ.,16 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சத்திரம், சபரிமலை இடையே 12 கி.மீ., துாரம் உள்ளது. அந்த பாதையை சீரமைத்து, குடிநீர், தற்காலிக கழிப்பறை, வெளிச்சம் உட்பட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் வனத்துறை உட்பட பல்வேறு துறையினருக்கு உத்தரவிட்டது.
ஆனால் துவங்கி எட்டு நாட்கள் ஆகியும் வசதிகள் செய்யப்படவில்லை.
குறிப்பாக பாண்டிதாவளம், கழுதைகுழி இடையே குடிநீர், வெளிச்சம் இல்லை. அப்பகுதி பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்டது என்பதால் யானை, காட்டு பன்றிகள் உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. கரடு, முரடான பாதையில் பக்தர்கள் டார்ச், அலைபேசி வெளிச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
பக்தர்கள் மீட்பு
திண்டுக்கல்லை சேர்ந்த 35 பக்தர்கள் கொண்ட குழு நேற்று முன்தினம் இப்பாதையில் சபரிமலைக்கு சென்றனர். அதில் 32 பேர் சபரிமலை சென்றடைந்தனர். வருண் 20, கோடீஸ்வரன் 40, லட்சுமணன் 50, ஆகிய மூவரும் கழுதைகுழி பகுதியில் இறக்கத்தில் கால்கள் தளர்ந்து வனத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந் வனத்துறையினர் மருத்துவ குழுவின் உதவியை நாடினர். நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருந்ததால் வனத்துறை, தீயணைப்புதுறை, பேரிடர் மீட்பு படை இணைந்து மூவரையும் ஸ்ட்ரெச்சரில் சுமந்து இரவு 9:00 மணிக்கு சன்னிதானம் வந்தனர். அங்கு மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

