என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தர்; கண்காட்சியை திறந்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி
என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தர்; கண்காட்சியை திறந்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி
ADDED : ஜன 03, 2026 03:12 PM

புதுடில்லி: புத்தர் பெருமான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என டில்லியில் கண்காட்சியை திறந்த பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒளியும் தாமரையும்: விழித்தெழுந்தவரின் புனிதப் பொருட்கள் என்ற தலைப்பிலான புத்தரின் புனித சின்னங்கள் மற்றும் பழங்கால பொருட்களை உள்ளடக்கிய பிரமாண்ட கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 03) திறந்து வைத்தார். இதில் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் தாயகம் கொண்டு வரப்பட்ட புனிதப்பொருட்கள், பெட்டகங்கள் மற்றும் கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புத்தர் பெருமான் என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான் பவுத்த போதனைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்த ஒரு நகரத்தில் பிறந்தேன். நான் சென்ற இடமெல்லாம் புத்தரின் பாரம்பரியத்தைப் பரப்ப முயற்சித்தேன். மேலும் போதி மரக்கன்றை சீனா, ஜப்பான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் எடுத்துச் சென்றேன். இந்தியாவை பொறுத்தவரை இந்த புனித சின்னங்கள் இறைவனின் ஒரு பகுதியாகும்.
நான் குஜராத் முதல்வராக இருந்த போது புத்தர் தொடர்பான ஆயிரக்கணக்கான நினைவுச்சின்னங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நமது அரசு அவற்றை பாதுகாத்து தற்போதைய தலைமுறையினருக்கு அது தொடர்பான அறிவை பரப்பி வருகிறது. புத்தரின் போதனைகள் அனைத்து மனித குலத்திற்கும் சொந்தமானது.
உலகெங்கிலும் புத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய இடங்களின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கிறது. இந்தியா புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் பாதுகாவலர் மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

