இந்தியாவுக்கு எதிரான உலக கூட்டணியில் காங்கிரஸ்: ராகுலின் ஜெர்மனி பயணம் குறித்து பா.ஜ., தாக்கு
இந்தியாவுக்கு எதிரான உலக கூட்டணியில் காங்கிரஸ்: ராகுலின் ஜெர்மனி பயணம் குறித்து பா.ஜ., தாக்கு
ADDED : டிச 28, 2025 02:44 AM

புதுடில்லி: “நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் உலக முற்போக்கு கூட்டணியில் காங்., அங்கம் வகிக்கிறது. இதன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவே ஜெர்மனிக்கு ராகுல் சென்றார்,” என, பா.ஜ., - எம்.பி., சுதான்ஷு திரிவேதி குற்றஞ்சாட்டினார்.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கடந்த 15 முதல் 20ம் தேதி வரை ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மறுப்பு
அவருடன், காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவும் சென்றிருந்தார். குளிர்கால கூட்டத்தொடர் நடந்த நிலையில், ராகுலின் இந்த பயணம் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த பயணத்தின் போது, நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு நெருக்கமானவர்களை ராகுல் சந்தித்ததாக, பா.ஜ., குற்றஞ்சாட்டி இருந்தது; காங்., மறுத்தது.
ராகுலின் ஜெர்மனி பயணம் குறித்து, சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், “உலக முற்போக்கு கூட்டணியில் காங்., அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவே ஜெர்மனிக்கு ராகுல் வந்தார்.
“கூட்டணியின் தலைமை குழுவில் அவர் இருக்கிறார். நானும் உறுப்பினராக இருக்கிறேன்,” என்றார்.
இது குறித்து, ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., சுதான்ஷு திரிவேதி, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டுக்கு எதிராக உலக முற்போக்கு கூட்டணி செயல்படுகிறது. அதில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பல்வேறு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
அப்படியிருக்கையில், அந்த கூட்டணியின் தலைமை குழுவில் ராகுல் இருப்பதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவே ஜெர்மனிக்கு சென்றதாகவும், அவரது ஆலோசகர் சாம் பிட்ரோடாவே வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
மறைக்க முடியாது
நம் நாட்டுக்கு எதிரான உலகளாவிய சதியில் காங்கிரசும் உறுப்பினராகி விட்டதா? நமக்கு எதிரான வெளிநாட்டு தீய சக்திகளுடன் அக்கட்சி கைகோர்த்து உள்ளதா? இனியும் காங்., நாடகமாட முடியாது.
அனைத்தையுமே சாம் பிட்ரோடா உளறி விட்டார். காங்., இனி எதையும் மூடி மறைக்க முடியாது. ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய உலகளாவிய அமைப்புகளுடன் ராகுலுக்கு இருக்கும் தொடர்பை, சாம் பிட்ரோடா வெளிப்படையாக கூறி விட்டார்.
'முற்போக்குவாதம்' என்ற போர்வையில் வெளிநாட்டு நிதி பெறும் ஒரு சித்தாந்த கட்டமைப்பு, நம் நாட்டு அரசியலில் ஊடுருவுகிறது. இது இருக்கிறதா என்பது தற்போது கேள்வியல்ல, இது ஏன் இவ்வளவு சாதாரணமாக ஏற்கப்படுகிறது என்பது தான் கேள்வி. இதற்கு ராகுல் என்ன சொல்லப் போகிறார்?
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, உலக முற்போக்கு கூட்டணியில் காங்., அங்கம் வகிப்பதாக சாம் பிட்ரோடா கூறிய பேட்டியையும், சமூக வலைதளத்தில் பா.ஜ., பகிர்ந்தது.

