வங்கி மோசடி: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு
வங்கி மோசடி: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு
ADDED : செப் 10, 2025 06:54 PM

புதுடில்லி: எஸ்பிஐ வங்கி ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. அவரது தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை தழுவிய நிலையில், வெவ்வேறு மோசடி வழக்குகளிலும் அவர் சிக்கியுள்ளார்.
எஸ்பிஐ வங்கிக்கு ரூ.2,929 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடன் பிரச்னையில் திவாலான அவரது நிறுவனமான ஆர்காம்-ஐயும் மற்றும் அனில் அம்பானியையும் மோசடியாளர் என பாங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்தது. ஜூனில் எஸ்பிஐ வங்கியும், ஆகஸ்ட்டில் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஆர் காமை மோசடி பட்டியலில் இணைத்தது.
இந்நிலையில், வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.