ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்
ADDED : ஆக 13, 2025 12:09 PM

பாராமுல்லா; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் நேற்று பின்னிரவு எல்லைக் கட்டுப்பபாட்டுக் கோட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டறிந்த ராணுவத்தினர் அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.
பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே சண்டை நீண்ட நேரம் நீடித்தது.
ராணுவத்தின் தொடர் நடவடிக்கையின் எதிரொலியாக, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பினர். இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் பனோத் அனில்குமார் வீரமரணம் அடைந்தார். இந்த தகவலை ராணுவம் சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளது.
தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் மற்றும் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.