டில்லி பகுதியில் வானில் வினோத வெளிச்சம் சீன ராக்கெட்டின் கழிவுகளா?
டில்லி பகுதியில் வானில் வினோத வெளிச்சம் சீன ராக்கெட்டின் கழிவுகளா?
ADDED : செப் 21, 2025 01:03 AM

புதுடில்லி: டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை வானில் தென்பட்ட பிரகாசமான வெளிச்சத்தை, பலரும் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். இது விண்கல் அல்லது விண்வெளி கழிவுகள் விழுந்ததால் ஏற்பட்டதா என ஆய்வு நடக்கிறது.
டில்லி, குருகிராம், நொய்டா, ஜெய்ப்பூர் நகரங்களின் வான்வெளியில் இந்த வெளிச்சம் பரவலாக தெரிந்தது.
அதிகாலை 1:20 மணியளவில் இந்த வெளிச்சம் வானில் தென்பட்டதாக அதை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'அதிகாலையில் வானில் ஆச்சரியமூட்டும் வகையில் தீ பிழம்பு விழுவதை பார்த்தோம். இது ஒரு அதிசய வானியல் நிகழ்வாக பட்டது.
'இதற்கு முன் நேரில் இது போல் கண்டது இல்லை. இது விண் கற்கள் விழுந்ததாக இருக்கலாம் அல்லது ராக்கெட் வெடித்து சிதறியதாக இருக்கலாம்' என்றனர்.
இது பற்றி இஸ்ரோ அல்லது விமானப் படை சார்பில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. வானியல் நிபுணர்கள் சிலர், 'இது விண்கற்கள் வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒளி போன்று தெரியவில்லை.
'சீனாவின் சி.இசட்.3பி ராக்கெட்டின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பியது போலத் தோன்றுகிறது.
'மெதுவான வேகம், சிதறல் வடிவம் போன்றவை இதை உறுதிப்படுத்துகின்றன. அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படலாம்' என, தெரிவித்தனர்.