/
செய்திகள்
/
இந்தியா
/
'பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால் கோவில், மசூதியாக இருந்தாலும் அகற்ற வேண்டும்' புல்டோசர் நடவடிக்கை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
/
'பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால் கோவில், மசூதியாக இருந்தாலும் அகற்ற வேண்டும்' புல்டோசர் நடவடிக்கை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
'பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால் கோவில், மசூதியாக இருந்தாலும் அகற்ற வேண்டும்' புல்டோசர் நடவடிக்கை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
'பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால் கோவில், மசூதியாக இருந்தாலும் அகற்ற வேண்டும்' புல்டோசர் நடவடிக்கை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : அக் 02, 2024 02:58 AM

புதுடில்லி, 'பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். சாலைகள், நீர் நிலைகள், ரயில் பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால், அது கோவிலாக இருந்தாலும், மசூதியாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த விஷயத்தில் மதத்தை பார்க்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மீண்டும் விசாரணை
குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் புல்டோசர் வாயிலாக இடிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு, கடந்த செப்., 17ல் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல், இதுபோன்று குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகளை இடிக்கக் கூடாது, என அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தர பிரதேசம், கு-ஜராத், மத்திய பிரதேசம் மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் எந்தவித நோட்டீசும் வழங்காமல் இடிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது தவறான வாதம். ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிய அவகாசம் வழங்கப்பட்டு, சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவ்வாறு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு சொந்தமாக இருப்பது என்பது எண்ணிக்கையில் மிகவும் குறைவு.
உச்ச நீதிமன்றத்தின் கடந்த உத்தரவால், எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தீர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியதாவது:
ஒருவர் குற்ற வழக்கில் சிக்கிய மறுநாளே, அவருடைய வீடு புல்டோசர் வாயிலாக இடிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன. இது, வழக்கை விசாரிக்காமலேயே தீர்ப்பு வழங்குவதாக அமைந்துவிடும்.
ஒரு இடத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் உள்ளன. அதில், குற்ற வழக்கில் சிக்கியவரின் வீட்டை மட்டும் இடித்து தள்ளுவது எந்த விதத்தில் நியாயம். சட்டவிரோதமான கட்டடங்களை இடிப்பதற்கு அரசு நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கு பல நடைமுறைகள் உள்ளன.
வலியுறுத்தல்
முதலில் நோட்டீஸ் வழங்க வேண்டும். அதற்கு உரிய பதிலைப் பெற வேண்டும். அதில் திருப்தி இல்லாதபோதுதான், உரிய அவகாசம் அளித்து, கட்டடத்தை இடிக்க வேண்டும்.
அதில் குடியிருப்போர், மாற்று ஏற்பாடு செய்து கொள்வதற்கு அவகாசம் தர வேண்டும். வீட்டை இழந்து குழந்தைகள், வயதானவர்களுடன் சாலையில் இருப்பதை பார்க்க முடியாது, ஏற்க முடியாது.
சட்டவிரோத கட்டடங்கள் என்பது நாடு முழுதும் உள்ள பிரச்னை. அதனால், இதில் நாடு முழுதுக்குமான நடைமுறைகள் தேவை. அதையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
எங்களுடைய இந்த உத்தரவு அல்லது கருத்துகள், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பானவை; இது நாடு முழுதுக்குமானது, அனைத்து மதத்தினருக்குமானது.
அதே நேரத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்களாக இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு மாநில நிர்வாகங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை.
இதில் மக்களின் நலன், பாதுகாப்பே முக்கியம். சாலைகள், நீர்நிலைகள், ரயில் பாதைகள் என, எந்த ஒரு பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றலாம்.
இது மதத்துக்கு அப்பாற்பட்டது. கோவில், மசூதி, குருத்வாரா என, எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தலமாக இருந்தாலும், பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இந்த விஷயத்தில் மதத்தை பார்க்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், புல்டோசர் வாயிலாக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், அமர்வு ஒத்திவைத்துள்ளது.

