ADDED : பிப் 08, 2024 07:21 AM

புதுடில்லி : 'டில்லி குடிநீர் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான ஒப்பந்தங்கள் வாயிலாக பெறப்பட்ட ஊழல் பணம், ஆம் ஆத்மியின் தேர்தல் நிதியாகச் சென்றுள்ளது' என, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
டில்லி குடிநீர் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் மோசடி நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வாரியத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் ஜகதீஷ் குமார் அரோரா, ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வால் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.ஐ., தொடர்ந்த இந்த வழக்கின் அடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையை துவக்கியது.
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், டில்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் சலாப் குமார், ராஜ்யசபா எம்.பி.,யும், ஆம் ஆத்மி பொருளாளருமான என்.டி.குப்தாவின் அலுவலகம், ஆடிட்டர் ஒருவரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், 1.97 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப் பட்டன.
இது தவிர, குற்றவியல் ஆவணங்கள் மற்றும் 'டிஜிட்டல்' ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி குடிநீர் வாரியத்தின் ஒப்பந்தம், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக அந்நிறுவனம் சார்பில் குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் ஜெகதீஷ் குமார் அரோராவுக்கு ஊழல் பணம் நேரடியாகவும், வங்கி கணக்குகளிலும் அளிக்கப்பட்டது.
இந்த ஊழல் பணம், பல்வேறு நபர்களின் வாயிலாக, ஆம் ஆத்மியுடன் தொடர்புடைய நபர்களுக்கு சென்றடைந்தது. இதையடுத்து, அப்பணத்தை தேர்தல் நிதிக்கு அக்கட்சி பயன்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

