பெரும் ஊழல் நிறைந்த காங்., ஆட்சி: வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன்
பெரும் ஊழல் நிறைந்த காங்., ஆட்சி: வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன்
UPDATED : பிப் 09, 2024 10:28 AM
ADDED : பிப் 08, 2024 05:29 PM

புதுடில்லி: 2004-14 வரையிலான காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், பொருளாதாரம் பலவீனமாக இருந்ததாகவும் லோக்சபாவில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2014) ஏற்பட்ட பொருளாதார, நிர்வாக சீர்குலைவுகள் அனைத்தையும் தொகுத்து, வெள்ளை அறிக்கையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று (பிப்.,8) தாக்கல் செய்தார்.
ஆங்கிலம், ஹிந்தியில் இடம்பெற்ற இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஐ.மு கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை மந்தமாக்கியது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபோது, பொருளாதாரம் பலவீனமாக இருந்தது.
வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன. காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. காமன்வெல்த் போட்டியில் பெரிய ஊழல் நடந்துள்ளது. அந்த ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசமாக இருந்தன.
தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிலருக்கு மட்டுமே காங்., ஆட்சி அனுமதி அளித்துள்ளது. அந்நிய செலாவணி குறைந்த அளவில் கையிருப்பு இருந்தது. தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்கற்ற தன்மை இருந்தது.
தற்போது நாங்கள் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டு, சீரான வரிசையில் கொண்டு வருவதற்கான பணிகள் அளப்பரியதாக இருந்தது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதோடு வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி உதவி 300 சதவீதம்; வரி பகிர்வு 192 சதவீதம்
தமிழ்நாட்டிற்கான நிதி உதவி 2004-முதல் 2014 வரை ரூ.5,924.42 கோடி. அதே நேரத்தில் 2014 முதல் 2024 வரை ரூ.2,30,893 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகமாகும்.
வரி பகிர்வு
2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வரி பகிர்வுரூ.94,977 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 2014 முதல்2024 வரை ரூ.2,77,444 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இது 192 சதவீதம் அதிகமாகும்
இவ்வாறு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

