10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதை 31,000 கி.மீ.,: ஜெர்மனியின் மொத்த ரயில் பாதையை விட அதிகம்
10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதை 31,000 கி.மீ.,: ஜெர்மனியின் மொத்த ரயில் பாதையை விட அதிகம்
ADDED : மே 19, 2024 12:41 AM

மும்பை: ''கடந்த, 10 ஆண்டுகளில், புதிதாக, 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மிகப்பெரிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதையை விட அதிக துாரம்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் துாதர்களாக நியமிக்கப்பட்டோரின் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்தது.
அதில், பா.ஜ., மூத்த தலைவரும், ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையில் மேற் கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விளக்கினார்.
நாட்டின் வளர்ச்சி
அப்போது அவர் கூறியதாவது:
ரயில்வே துறை பால் சுரக்கும் பசுவாகவே முந்தைய ஆட்சிகளில் பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக சீர்திருத்த மேம்பாடுகள் செய்து, அதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டது.
கடந்த, 10 ஆண்டுகளில், ரயில்வேயில் பல புதிய திட்டங்களுடன், முந்தைய திட்டங்களை வேகப்படுத்துவது, விரிவு படுத்துவது, நவீனமயமாக்குவது போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
தற்போது நாளொன்றுக்கு, 4 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இது, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.
கடந்த, 10 ஆண்டு களில், 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இது, மிகப்பெரிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும்.
கடந்த, 10 ஆண்டுகளில், 44,000 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டது.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான 6-0 ஆண்டு கால ஆட்சியில், 20,000 கி.மீ., துாரத்துக்கே மின்மயமாக்கப்பட்டது. விரைவில் மின்மயமாக்குவதில், 100 சதவீதத்தை எட்ட உள்ளோம்.
'வந்தே மெட்ரோ'
மீட்டர் கேஜ் பாதைகளை, அகலப் பாதையாக்கும் பணிகளை, 1950 - 1960களிலேயே துவங்கியிருக்க வேண்டும். ஆனால் ரயில்வேயை தொடர்ந்து புறக்கணித்து வந்து உள்ளனர்.
இந்த திட்டங்களுடன், ரயில் நிலையங்களை புதுப்பிப்பது, உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பது ஆகியவற்றுக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருகிறது.
தற்போது, 300 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத், புல்லட் ரயில்' என, அதிகவேக ரயில் சேவைகள் சாத்தியமாகியுள்ளன. மஹாராஷ்டிரா - குஜராத் இடையேயான புல்லட் ரயில் சேவையைப் போல, எட்டு நகரங்களுக்கு இடையேயான சேவையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, இரு நகரங்களை இணைக்கும் 'வந்தே மெட்ரோ' சேவை, புதிய ஆட்சியின், முதல் 100 நாட்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம், இதைத் தவிர, 500 கி.மீ., துாரத்துக்கு உள்ள நகரங்களை இணைக்கும் 'வந்தே சேர் கார்', அதற்கு மேற்பட்ட தொலைவுள்ள நகரங்கள் இடையே, 'வந்தே ஸ்லீப்பர்' சேவை துவக்க உள்ளோம்.
கம்ப்யூட்டர் உட்பட மின்னணு இயந்திரங்களுக்கு தேவையான, 'செமி கண்டக்டர்' தயாரிப்பில் உலகின் மையமாக இந்தியா விளங்க உள்ளது.
மொபைல்போன் தயாரிப்பிலும் முன்னிலையில் உள்ளோம்.
கடந்த, 10 ஆண்டுக்கு முன், 98 சதவீத மொபைல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது, 99 சதவீத மொபைல்போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

