நாட்டின் மிக இளம் நகராட்சி தலைவராக 21 வயது நிறைந்த தியா பினு தேர்வு
நாட்டின் மிக இளம் நகராட்சி தலைவராக 21 வயது நிறைந்த தியா பினு தேர்வு
ADDED : டிச 28, 2025 02:49 AM

கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சி தலைவராக, இளம் தலைமுறையைச் சேர்ந்த, 21 வயதான தியா பினு புல்லிக்காக்கண்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம், நாட்டின் இளம் நகராட்சி தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
வரலாற்று சாதனை
இங்கு, ஆறு நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
ஆளும் இடது ஜனநாயக முன்னணி பின்னடைவை சந்தித்தது. 40 ஆண்டுகளுக்கும் மேல் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சி தலைவராக, இளம் தலைமுறையைச் சேர்ந்த, தியா பினு புல்லிக்காக்கண்டம், 21, தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
ஐந்தாவது முறை
இதன் மூலம், நாட்டிலேயே மிக இளம் வயதில் நகராட்சி தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்று உள்ளார்.
பாலா நகராட்சியின் 15வது வார்டில், சுயேச்சையாக களமிறங்கிய தியா பினு வெற்றி பெற்றார். அவரது தந்தை பினு புல்லிக்காக்கண்டம், மாமா பிஜு ஆகியோரும் சுயேச்சையாக வென்றனர். இதனால், பாலா நகராட்சி ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக, 'புல்லிக்காக்கண்டம்' குடும்பம் உருவெடுத்தது.
பாலா நகராட்சி தலைவராக பதவியேற்ற தியா பினு கூறுகையில், “என் தந்தை பினு தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எனக்கு 1 வயது இருக்கும் போதே அவர் கவுன்சிலராக இருந்தார். அவரை பார்த்து வளர்ந்தவள் நான். அதுவே எனக்கு ஊக்கமாக அமைந்தது,” என்றார்.

