பிரசாரத்தின்போது தேர்தல் விதி மீறியதாக... 23 வழக்குகள்! பா.ஜ., மீது 12 - காங்., மீது 9 - ம.ஜ.த., மீது 2!
பிரசாரத்தின்போது தேர்தல் விதி மீறியதாக... 23 வழக்குகள்! பா.ஜ., மீது 12 - காங்., மீது 9 - ம.ஜ.த., மீது 2!
ADDED : ஏப் 25, 2024 03:53 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ., மீது 12, காங்கிரஸ் மீது 9, ம.ஜ.த., மீது 2 என, 23 வழக்குகள் பதிவாகி உள்ளன.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு ரூரல், உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய 14 தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்கிறது.
சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பால், பல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, மே 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 16ம் தேதி அமலுக்கு வந்தன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், நகைகள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. 24 மணி நேரமும் சுழற்சி முறையில், தேர்தல் அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பண பட்டுவாடா
'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் தலைவர்கள் பிரசாரத்தின்போது, வெறுப்பை துாண்டும் வகையில் பேசக் கூடாது, மத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசக் கூடாது' என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
இதை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
ஆனாலும் கர்நாடக அரசியல்வாதிகள் யாரும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை மதிப்பதாக தெரியவில்லை. பிரசாரத்தின்போது ஜாதி, மதத்தை முன்நிறுத்தி ஓட்டு சேகரித்தனர்.
வாக்காளர்களை மிரட்டும் விதமாக ஓட்டு சேகரித்ததாக, துணை முதல்வர் சிவகுமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பண பட்டுவாடாவில் ஈடுபடுவதாக காங்கிரஸ், பா.ஜ.,வினர் பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர்.
குழந்தைகள்
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக, கட்சிகள் தலைவர்கள் ஒருவருக்கொருவர், தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகாரும் அளித்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறிப் பேசியதாக, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மீதும் வழக்குப்பதிவாகின.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மத வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக, பா.ஜ., மீது 8; காங்கிரஸ் மீது 6; ம.ஜ.த., மீது ஒரு புகாரும் பதிவாகி உள்ளது.
மத உணர்வை துாண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ., மீது 12; காங்கிரஸ் மீது 9; ம.ஜ.த., மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு, பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு உள்ளது.
ஆனால் அதையும் மீறி குழந்தைகளை, பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக காங்கிரஸ் மீது 7; பா.ஜ., மீது 7; சுயேச்சை வேட்பாளர் மீது 1 புகார் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நாளை நடக்கிறது.
இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

