ADDED : மே 17, 2024 05:49 AM

குடகு : வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
குடகின் விராஜ்பேட் முண்டோடு காப்பு காட்டில், மரங்கள் வெட்டப்பட்டன. இதுகுறித்து கடந்த மாதம் 30ம் தேதி, முண்டோடு வன சரக அலுவலர் அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்தார். ஆனால் இதுகுறித்து வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கவில்லை. மரங்கள் வெட்டப்பட்டது பற்றி அறிந்ததும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முண்டோடு காப்பு காட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது தெரிந்தது.
அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், கேள்வி எழுப்பினர். அந்த பதிவு வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கவனத்திற்கு சென்றது. இதையடுத்து மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மரங்களை வெட்டியவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், வன அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். மரம் வெட்டப்பட்டது குறித்து, தனது அலுவலக கவனத்திற்கு கொண்டு வராதவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க, ஈஸ்வர் கன்ட்ரே முடிவு செய்து உள்ளார்.
***

